சிறுகதை

Wednesday, October 9, 2013

நிதர்சனம்

கதர் ஜிப்பாகாரர்கள் அவ்வப்போது வந்து வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த் என்று கத்திக்கொண்டு சென்றார்கள்.. சில இடங்களில் மூவர்ண கொடி  பறந்துக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் போராடி சுதந்திரம் பிறக்க இன்னும் சில தினங்களே இருந்தன.... நாடுமுழுவதும் புத்துனர்ச்சியுடன் சுதந்திர தினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.... அங்காங்கே மேடை பேச்சுக்களும் கூட்டங்களும் நடந்தேறிக்கொண்டிருந்தன. பொம்மலட்டங்கள் தெருக்கூத்துக்கள்... தலைவர்களையும் தியாகிகளையும் மக்களுக்கு நினைவு படுத்திக்கொண்டிருந்தன. இவற்றின் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சிதம்பரத்திற்கு கிழக்கே ரெண்டு மைல் தொலைவில் வெள்ளாற்றங்கரை ஓரத்திலே தில்லை காடுகள் நடுவே இருந்தது கிள்ளை கிராமம்.

அவ்வாற்றின் கரை வழியே ஓடிய மண் பாதைகளில் அச்சிறுவன் நடந்துக்கொண்டிருந்தான். ஏறக்குறைய 12 வயது இருக்கும். உக்கிரமான வெயிலும், உப்புக் காற்றும் அவனுக்கு களைப்பையும் தாகத்தையும் கொடுத்திருக்கவேண்டும் மேலும் வெகு நேரமாக நடந்து கொண்டிருப்பவன் போல் தோன்றினான் கையில் பெரிய துணிப்பை இருந்தது.  தூரத்தில் தெரிந்த ஆலமரத்தில் ஓய்வெடுக்க எண்ணி அதை நோக்கி சென்றான். அங்கு சிலர் அமர்ந்திருப்பதை பார்த்த அவன்... அங்கே நிற்காமல் மேலே சென்றான்.
அப்பொழுது ஒரு குரல் அவனை நிறுத்தியது.

"டேய் முருகா... என்ன பாத்துட்டு பாக்காத மாறி போற..?" எனக் கேட்டுக்கொண்டே ஒருவன் அவனை நோக்கி வந்தான்.
"என்ன சிதம்பரத்துல நல்ல வியாபாரமா பை காலியா இருக்கு..." என்று பேசிக்கொண்டே அந்த பையில் கை விட்டு கொஞ்சம் இருந்த முறுக்கு துணுக்குகளை எடுத்து வாயில் போட்டான். முருகன் அவனிடம் பேச்சு கொடுக்காமல் மேலே செல்ல முயற்சித்தான்.
"யங்க டா ஓடுற.. மனோ எப்படி இருக்கா..."
"இங்க பாரு சுந்தரம்... மனோ பத்தி என் கிட்ட பேசாதேன்னு உன் கிட்ட எத்தன தடவ சொல்றது,, என்ன விடு நான் போகணும்.."
"நா பேசாம யாரு பேசுவா.. போன தைலயே முடிச்சுருக்க வேண்டியது.. பாழா போன உன் அண்ணன் போய் போலீஸ்ல மாட்டிகிட்டு  கல்யாணத்த கெடுத்துட்டான்.."
அண்ணனை பத்தி பேச்சை ஆரம்பித்தவுடன் முருகனின் முகம் சுருங்கி போனது.... அவனது அண்ணன் கணேசை போலீசார் போன வருடம் அரசாங்கத்திற்கு எதிராக பேசியதற்காகவும் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்தனர். அதன் பின் என்ன ஆனான் என்ற செய்தியே இல்லை. சுந்தரத்திற்கு சர்காரில் சில ஆட்களை தெரியும் கணேஷ் பற்றிய விவரமும் தெரியும் இருந்தும் அவன் யாரிடமும் சொல்வதில்லை.

முருகன் நழுவிவிடத்தான் பார்த்தான் சுந்தரம் தான் விடவில்லை. அவன் கழுதை சுற்றி பிடித்துக்கொண்டு நா சொல்றத மனோட்ட சொல்றியா...? என்றான்
"உன் பேச்சை எடுத்தாலே அக்கா அடிக்கும் ஆள விடு..."

"இத சொன்ன அடிக்காது...."

"அப்படி என்ன சொல்ல போற.."

"ஹ்ம்ம் உங்கண்ணன் கணேசை பத்தி...."

முருகனுக்கு ஆர்வம் ஆகி விட்டது... அவன் எத்தனையோ தடவை சுந்தரத்திடம் கெஞ்சி இருக்கிறான் இருந்து சுந்தரம் ஒரு போதும் வாய் திறந்ததே இல்லை.

"மாமா மாமா சொல்லு மாமா.."

"இப்போ தான் மாமாங்கற நெனப்பு வருதா உனக்கு.."

"சொல்லு மாமா.. நீ என்ன சொன்னாலும் மனோட்ட அப்படியே சொல்லிடறேன்"

"கல்யாணத்துக்கு ஏற்பாடெல்லாம் ஆரம்பிக்க சொல்லு...." என்று கண்சிமிட்டினான்
"ஏன் மாமா.. அண்ணன் இல்லமா எப்படி.."
"முட்டாள் உங்கன்னே விடுதலை ஆயிட்டான்... வந்துருவான்"
என்று சுந்தரம் கூறியவுடன் முருகனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நடந்து வந்த களைப்பெல்லாம் மறந்து
"ஐ.. நா இப்பவே அம்மாட்ட போய் சொல்றேன்.." என்று ஓடத்துவங்கினான்.

அவனை இழுத்துப்பிடித்த சுந்தரம் "மனோட்ட சொல்ல சொன்ன அம்மாட்ட... அம்மாட்ட சொல்லுவியா..?" என்று மண்டையில் ரெண்டு தட்டு தட்டி..
"எங்க ஓடுற நில்லு மனோக்கு ஏதாவது வாங்கி தரேன் எடுத்துட்டு போ..." என்று சுற்றி முற்றி பார்த்தான்.
ஆலமரத்தின் அடியில் ஒரு முதியவர் முகம் முழுக்க மறைத்த தடியுடன் அமர்ந்திருந்தார். பழுப்பேறிய வேட்டி... கழுத்தில் ஒரு துண்டு.... கையில் ஒரு கம்பு.. மரத்தின் வேரில் சாய்ந்து படுத்திருந்தார்.
அவரிடம் சென்று "யோவ் அது என்ன அந்த பைல விக்குறதா..?" என்றான்
அவர் பதில் சொல்லாமல் அவனை உற்று பார்த்தார்.
"யோவ் கேக்றோம்ல என்ன வச்சுருக்க  பைல"
அவர் மீண்டும் பதில் சொல்லாமல் பையை  இறுக்கி பிடித்தார்.
சுந்தரத்திற்கு அவர் அவனை அவமதிப்பதாய் தோன்றியது.
"கேடுக்கிட்டே இருக்கேன்..... கிழட்டு @@##" என்று காலால் உதைத்தான். அவர் கையில் இருந்த அந்த அழுக்கேறிய பை மண்ணில் நழுவியது. ஈன சுரத்தில் அவர் இடுப்பை பிடித்துக்கொண்டு முனகினார். முருகனுக்கு அவரை பார்க்க பாவமாய் இருந்தது. "மாமா.. அவர விட்டுடு மாமா..." என்றதிற்கு அவனுக்கும் தலையில் அடி விழுந்தது. அந்த பையை தலை கிழாய் தூக்கினான் உள்ளிருந்து கச்கப்பட்ட காகிதங்கள் விழுந்தன. அதை பார்த்த சுந்தரத்திற்கு புருவங்கள் உய்ந்தன.
"ஓஹோ நீதானா.... ஜமீன சர்காருல  கடுதாசி போட்டு மாட்டி  விட்டது நீ தானா..?"
அவர் பயத்தில் நடுங்க ஆரம்பித்தார்.. அவரது தோளில் போட்டிருந்த துண்டை பிடித்து அவரை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
"சாமி நான் இல்ல சாமி... எனக்கு எழுத படிக்கவே தெரியாது...." கெஞ்சினார்
"அப்புறம் என்ன மயித்துக்கு இவ்வளோ காகிதம்.. வெள்ளகாரங்க மாதிரி பீ தொடைக்கவா..?"
அவர் கைகளை பிடிதுக் கெஞ்ச ஆரம்பித்தார்.... பொளேர் என்று கன்னத்தில் ஒரு அரை.." என்ன கைய பிடிக்குற.. அவ்வளோ தைரியமா.. உன்ன தான் நாலு மாசமா  தேடிகிட்டு இருக்கேன்.... இத்தனை நாளு ஜமீன் காசுல தானே வயித்த ரொப்புன.. இப்போ வெள்ளகாரே போறான்னு சொன்ன வுடன்னே... மொட்டக் கடுதாசியா...."
" அய்யா சாமி.... பெரிய  விவகாரம் எல்லாம் எனக்கு தெரியாது சாமி.... வெயிலுக்கு காத்தாட மரத்தடி ஒதுங்குன்னே..ஊரு பக்கம் வந்தே நாளாச்சு சாமி.. வுட்டுடுங்க..." என்று கை படாதவாறு கெஞ்சினார்.
அவர் துண்டை விட்ட சுந்தரம் "அப்புறம்  எதுக்கு உனக்கு இவ்வளோ கடுதாசி..??"
" எல்லாம் குப்ப சாமி.... திருவிழா, நாடக விளம்பர கடுதாசிங்க.."
சுந்தரம் அவரை பார்த்தான் "அதெல்லாம் உனக்கு எதுக்கு..?"
"நான் படம் வரைவேனுங்க..." சுந்தரம் சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.. முருகனின் தோளில் கை  போட்டு சிரித்தான். சிரித்துக்கொண்டே மீண்டும் ஒரு அரை "என்ன பாத்தா என்ன முட்டா பய மாறி தெரியுதா..?"
அவருக்கு கண்ணீரே வந்துவிட்டது.."சத்தியமா சாமி...."
"ப்ச்ச உன்கிட்ட   பேசினா  சரி பட்டு வராது.." அவர் துண்டை பிடித்து தர தரவென்று  சென்றான்.
"சாமி நம்புங்க.. நா வேணா உங்கள வரையட்டுமா..?"
சுந்தரம் சற்று நின்று "என்ன ஒன்னும் வரைய வேண்டாம் இந்த இவன வரை பாப்போம்"  என்று முருகனை காமித்தான்.

அவர் கசங்கிய காகிதம் ஒன்றை கையில் எடுத்தார்.. எச்சில் தொட்டு நேர் படுத்தினார்.. இடுப்பில் சொருகி இருந்த கரி துண்டு ஒன்றை எடுத்து தரையில் தேய்த்து கூர்மை செய்துக்கொண்டார். முருகனை இப்படி உட்கார் அப்படி உட்கார் என்று கூறினார். தலையை கொஞ்சம்  திருப்ப சொன்னார் அவன்  திருப்பாததால் லேசாய் அவன் தாடையை பிடித்து திருப்பினார்.மூங்கிலால் படீர் என்று அவர் கையில் ஒரு அடி விழுந்தது. "ஆ ஆ.." என்று கத்திக்கொண்டே கையை உதறினார்.
"என்ன ஆ ஊன்னுட்டு.. தொடக்கூடாது.. ஹ்ம்ம் ஆரம்பி ஆரம்பி  நேரம் ஆகுதுல.." என்று கூறிக்கொண்டே முருகனுக்கும் ஒரு அடி "அவன் பாட்டுக்கு தொடுறான் அப்படியே பிள்ளையார் மாறி உட்காதிருக்க..." என்றான் சுந்தரம்.
என் பெங்காலி நண்பர் இந்த கதைக்காக வரைந்த ஓவியம்  

வலி தாங்கமல் முருகன்  கண்ணீர் விட்டன... அந்த முதியவரும் கண்களை துடைத்துக்கொண்டு வரைய ஆரம்பித்தார்.. சுந்தரம் புகையிலையை சுருட்டி வாயில் வைத்தான்.
பொறுக்க முடியாமல் சில  நிமிடங்களில்லேயே சுந்தரம் அவர் வரைந்து கொண்டிருந்த காகிதத்தை  பிடுங்கி பார்த்தான்.
"ஹ்ம்ம்  சுமாரா வரையுற.. இருந்தும் இத்தனை எதுக்கு உனக்கு.." என்று அவர் வரைந்ததை  எறிந்தான்.
"நா  நிறையா வரைவேனுங்க...." என்றார்
"நா நம்பள... நாளைக்கு  வருவேன்.. எல்லாத்தையும் எடுத்துட்டு வா..."
சரி என்று தலை ஆட்டினார்.. அது என்ன அந்த சுருக்கு பைல
அவர் நடுக்கமான குரலுடன்
" நரி எழந்த பழம்.." என்றார்
"இந்தா பத்து பைசா...அத குடு.."
"இல்ல நா இத விக்குறது வச்சுக்கல.."
"அப்போ சும்மா கொடு.." என்று  பிடுங்கி கொண்டான்.
அதை முருகனிடம் கொடுத்து "இத மனோட்ட கொடுத்துரு நரி இழந்த பழம் கிடைகிறது  ரொம்ப கஷ்டம்..போ.." என்றான்
முருகனும் அந்த ஒரு வார்த்தைக்கு தான் காத்திருந்தார் போல ஓட ஓட ஆரம்பித்தான் "டேய் முருகா போற வழியில நீயே தின்றாத.." என்று சுந்தரம் சொன்னது முருகன் ஓட ஓட காற்றில் கரைந்து வலுவிழந்தது. சுந்தரம் மறைந்ததும் முருகன் அந்த பையை  புதரில் எரிந்து விட்டான்... சுந்தரத்திற்கு தெரியாமல் அவன் எடுத்து வந்த  காகிதத்தை பார்த்தான். அது அவனை கண்ணாடி போல் பிரதி பலித்து இருந்தது. ஒரே ஒரு வித்யாசம் படத்தில் அவன் கண்களில் கண்ணீர்.

பி.கு: 1947-ல் இருக்கும் இக்கதை குறும்படதிற்காக இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது.... பிறகு நமக்கு இதெல்லாம் கஷ்டம் என்று கைவிடப்பட்டது. சரி படம்  எடுக்க முடியவில்லை கதையாகவாது  எழுதலாம் என்றால் சற்றே பெரிதாக வந்துவிட்டது.  அதை மன்னித்து படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும் 

No comments: