சிறுகதை

Tuesday, January 28, 2014

பூவெழினி 3

3. உற்ற நண்பன்

பொதுவாக காரை என்று முடியும் ஊர்களை கண்களை மூடிக்கொண்டு கடற்கரை ஊர்கள் என்று கூறி விடலாம். ஏழ்குணகாரை நாடுகள் என்பது கடற்கரையில் இருந்த ஏழு நாடுகளை குறிப்பதுவே. அக்காலத்தில் மிக முக்கிய மற்றும் பெரிய குடியேற்றங்கள் கடற்கரையை ஒட்டி இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஓங்கி உயர்ந்த மலைகளும்.. அடர்ந்த காடுகளும் தான். கரடு முரடான காடுகளில் செங்குத்து சரிவுகளில் ஓடி வரும் ஆறுகளும் அவ்வற்றை சுற்றி மண்டியிருந்த காடுகளும் அதில் இருந்த அபாயகரமான வன விலங்குகளும் குடியேறுவதை கடினமாக செய்து இருந்தது.  அப்படிப்பட்ட கடினமான புகலிடத்தில் வாழ்ந்தது புங்கனின் ஊர் கால்னாட்டன் காடு.

அவ்வூர் மக்களின் ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. திடீர் என்று தாக்கி ஊரை சூறையாடும் நாடடோடி கும்பல்கள், புலிகளின் வேட்டை, பொங்கி வரும் காட்டாற்று என்று அவ்வூர் பதுகாப்பற்றதாகவே இருந்ததது. இருந்தும் அவர்களுக்கு கடற்கரையில் இருப்பதை விட காட்டில் வாழ்வது அவ்வளவு ஆபத்து இல்லை என்றே கருதினர். கடல்கள் என்றாவது ஒரு நாள் மலைகள் போல எழுந்து..... விரிந்து கிடக்கும் மதுரையை கூட விழுங்கி விடும் என்று அவர்கள் பயந்தனர். அவர்களுக்கு உயரமான இடம் பாதுகாப்பானதாக பட்டது.

ஏதேச்சையாக அந்த பக்கம் வந்த ராபதேஸ்வரிடம் தங்கள் குறைகளை கூறி புலம்பினர். அப்போது அவர் அவர்களுக்கு காட்டிலேயே புதிதாக இடம் ஒன்றை தேர்வு செய்து சுற்றி அரண் அமைந்த ஊரை ஏற்படுத்தினார். மேலும் அவர்கள்  ஊரிலேயே வீரனான புங்கனை தேர்ந்தெடுத்து அவருக்கு சிஷ்யனாக  என்றும் கேட்டுக்கொண்டனர். ராபதேஸ்வரரும் அதை ஏற்றுக்கொண்டு அவனுக்கு முழு பயிற்சி அளித்து  சமயத்தில் மீண்டும் கால்னாட்டன் காட்டிற்கு அனுப்புவதாக வாக்களித்தார்.

அன்று வரை தன் அத்தை மகளை காதலித்து திருமணதிற்கு காத்திருந்த இளைஞன் புங்கன் அவளை தனக்காக காத்திருக்கும்படிகூறி விட்டு தன் ஊருக்காக விடைபெற்று வந்து இத்துடன் மூன்று ஆண்டுகள் ஆகிறது. இத்துணை நாள்களாக பயிற்சி முடிந்ததும் ஊருக்கு செல்லலாம் என்றும் எத்தனை தூரம் விரைவாக கற்றுகொண்டால், அத்தனை விரைவாக தன் காதலியை காணலாம் என்று எண்ணியிருந்த புங்கன் ராபதேஷ்வரர் தன்னை கபடாபுரதிற்கு செல்ல கட்டளை இட்டதும் கொஞ்சம் ஒடிந்து தான் போனான். இருந்தும் குருவின் வார்த்தைக்குள் ஆயிரம் காரணம் ஒழிந்திருக்கும் என்று எண்ணியவனாய் மகிழ்ச்சியாக கிளம்பினான்.

கூடவே இருந்து, பழகி பயிற்சி பெற்று உற்ற நண்பர்களாய் இருந்த அவர்கள், பயிற்சி முடிந்தவுடன் மதுரை படைகளில் ஒன்றாக சேரப்போகிறோம் என்று எண்ணி இருந்தனர். இப்படி நால்வரையும் நான்கு மூலைக்கு அள்ளி தெளிப்பார் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தது வியப்பில்லை. 

"போங்கள்.." என்று ராபதேஸ்வரர் உத்தரவிட்ட உடன் அடுத்த கருகல்லிலேயே நால்வரும் விடை பெற்று கிளம்பி விட்டனர். நல்லி தெற்கு திசையில் பயணம் மேற்கொண்டான்... உதயா கிழக்கே சென்று தன் அன்னையை பார்த்துவிட்டு வடக்கே பயணப்பட திட்டமிட்டுள்ளான்.... புங்கனும் நன்னனும் அடர்ந்த காடுகளின் ஊடே புரவிகளை மெதுவாக ஓடவிட்டுக்கொண்டு பேசிக்கொண்டே சென்றனர். நன்னன் கபடபுரத்தை தாண்டி எல்லையில் காவல் இருக்கும் நாகர் படைக்கு செல்லவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களாக பயணப்பட்டதால் அவர்கள் புரவிகள் களைப்படைந்திருந்தாலும் அவர்கள் என்னவோ உற்சாகமாகத்தான் இருந்தார்கள்.

"நேராக கபடாபுரம் செல்கிறாயே... இந்த முறையும் உன் அத்தை மகளை சென்று பார்க்கவில்லையா...." எனக் கேட்டான் நன்னன். 

"அங்கே போனால்.. கல்யாணாம் விருந்து என்று சில மாதம் தங்க வேண்டி வரும் .... காலத்தில் கபடாபுரம் சென்று சேர முடியாது..."

"ஒருவழி செய்... உன் அத்தை மகளை அங்கே வர சொல்லிவிடு.... இன்னும் தாமதித்தால் வேறு யாரையோ மணந்து கொள்ள போகிறாள்" என்று நகைத்தான் நன்னன்.

"உனக்கு பெண்களிடம் அதிகம் பழக்கம் இல்லை அல்லவா அதான்  இப்படி பேசுகிறாய்.... அவள் என்னை மணம்புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நான் மேரு மலையை தாண்டி போனாலும் தொடர்ந்து வந்து என்னை பிடித்து விடுவாள்...."

"ஒரு வேளை அவளுக்கு இந்நேரம் உன்னை பிடிக்கவில்லை போயிருந்தால்...."

புங்கன் பெரு மூச்சு விட்டு.."இந்நேரம் இடிப்பில் பிள்ளையை சுமந்து கொண்டிருப்பாள்...." என்று முடித்தவன் மேலும்..." அதனால் பாதகம் இல்லை.. என் அத்தைக்கு என்னை பிடிக்கும்.... ஒன்று போனால் இன்னொன்றை பெற்று எனக்காக கணக்கை நேர் படுத்தி வைத்திருப்பாள்...." என்று கூற இருவரும் சத்தம் போட்டு சிரித்தனர். 

அந்நேரத்தில் விசுக்கென்று பறந்து வந்த சக்கர அம்பு புங்கனின் இடது கண்ணை துளை இட்டு மறுபுறம் வெளிவந்து மரத்தில் குத்தி நின்றது. புங்கன் குதிரையில் இருந்து சாய்ந்தான் "புங்கா......" என்று நன்னன் கத்தியது காடுகளை அதிரச்செய்தது. 

Saturday, January 25, 2014

பூவெழினி 2

விதிகள் என்பது எப்போது ஏற்படுத்தப்படும். ஒரு விசயத்தை பல நாட்களாக பின்பற்றி அதில் உள்ள நல்ல பண்புகளை (good practices) கண்டு பிடித்து இதை செய்யுங்கள் என்று கூறுவது விதிகள். இப்படி நாடு, ஒற்றறிதல், சான்றாண்மை, சூது ,அமைச்சு போன்ற அதிகாரங்களின் பத்து பத்தாய் 1330 நற்பண்பு விதிகளினை கூறும் திருக்குறள், அது எழுதப்பட்ட காலத்திற்கு பல காலம் முன்பே தமிழர்கள் அரசாங்கம், பொருளாதாரம், வணிகம், கல்வி போன்றவற்றில் முழு வளர்ச்சி பெற்று விட்டார்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. திருக்குறளின் காலம் கி.பி. 31 என்று வரையறுக்கப்பட்ட போதிலும், அது அதற்கும் முற்ப்பட்டது என்பது என் உள்ளுணர்வு.
இனி....

2. வேளை வந்து விட்டது

"பெருமலை ஒருபுறத்தே திருமலை மறுபுறத்தே
பெருங்கடல் ஒருபுறத்தே இருங்கடல் மறுபுறத்தே
திருவுறச் சூழ்ந்த தாலே செழுவளம் கெழுமிச்சூழ
ஒருபெரும் கண்ணிநாடு குமரிநா டெனஉரைத்தார்"



ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் கொண்ட பெரும் ரஜ்ஜியாமான பாண்டிய நாட்டின் ஒப்பற்ற தலைநகராய் திகழ்ந்தது பக்றுளி ஆற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரை. அறமும் மறமும் தவறாது கட்டிகாத்து நீதி நெறியுடன் ஐபெருங்குழுவுடன் நாட்டை ஆண்டு வந்தான் மாமன்னன் மிஞிழி. திரை கடலோடி திரவியம் சேர்த்த வணிகர்களால் முத்தும் மணியும், வைரமும் வைடூரியமும் குப்பல் குப்பலாக குவிந்து கிடந்ததன. மேரு மலையின் காகம் கூட தங்கம் தான் என்று கூறும் அளவிற்கு தங்க சுரங்கள் குவிந்த முத்தூரில் இருந்து வந்த தங்கம் மதுரையின் மாட்டு வண்டிகளை கூட அலங்கரித்தது. 

 உள்நாட்டில் இருந்து வந்த விவசாயம் செய்யும் மருத நிலத்து மக்கள் மிளகு, கம்பு, சோளம், பருப்பு வகைகள்,கம்பு, ராகி, கரும்பு ஆகிவற்றை பண்ட மாற்றம் செய்து மணிகளையும், பட்டாடைகளையும் பெற்று சென்றனர்.கொல்லர், உழவர், தச்சர், நெசவாளிகள், மருத்துவர்கள், பெரும் வணிகர்கள் போன்ற பலர் வசிக்கும் மாபெரும் நகரமாய் விளங்கியது மதுரை. அதற்கு மேற்க்கே நூற்றி முபத்தி எட்டு காதமும் தெற்கே  என்பது காதமும் விரிந்திருந்த பெரும் நாடாய் விளங்கியது பண்டைய பாண்டிய நாடு. (ஒரு காதம் = 16 KM என்று கொள்க)

ஆலமரத்தை தாங்கும் ஆணி வேராய் மன்னனும் அமைச்சர்களும் இருந்தார்கள். ஏழேழ் நாடுகளில் இருந்த சிற்றசர்களும் அவர்களது யானை படையும், குதிரை படையும், காலால் படையும் ஆலம் விழுதுகளாய் அரசை தாங்கி நின்றது. அணைத்து விழுதுகளும் மண்ணில் புதைந்து மரத்திற்கு வழு ஊட்டுவதில்லை, சின்ன தென்றலில் கூட பல விழுதுகள் ஆடிவிடும்.


மண்ணுக்கு அடியில் பிறர் கண்ணுக்கு புலப்படாமல் தொலை தூரம் கடும் பாறைகளில் கூட பரவி நீரை தருவிக்கும் ஆணிவேரில் இருந்து கிளம்பு துணை வேறுகளாய் இருப்போரை நம்பித்தான் மாபெரும் நாடே உள்ளது. அவர்களுள் ஒருவர் தான் ராபதேஸ்வரர். அவர் எங்கிருந்து வந்தார், எப்படி வந்தார், அவர் வயது என்ன யாருக்கும் ஒன்றும் தெரியாது. அவரது கதை மர்மமும், அதிசயங்களும் நிறைந்தவை, நம்ப முடியாதவை. சிலர் இவரை சாக வரம் பெற்ற சித்தர் என்பார்கள், சிலர் இவரை மாயா மந்திரம் தெரிந்த சூனியவாதி என்பார்கள், இவருக்கு தெரியாமல் நாட்டில் எதுவும் நடந்துவிடாது என்று அனைவரின் நம்பிக்கை. எது என்னவோ எனக்கு தெரிந்து இவர் நம் அரசன் மிஞிழிக்கு உயிர் காத்த இறைவன் அதனால் அவன் நம்பிக்கைக்கு உரியவர். அந்த கதை பின்னே.


நாட்டின் இத்தனை முக்கிய நபர் இருப்பது அலைகடல் நீர் தெளித்து விளையாடும் மதுரையின் கோட்டைக்கு நடுவில் உள்ள மாட மாளிகையில் அல்ல. மேகமலையில் அமைதி சூழ் கானகத்துக்கு நடுவே மயில்கள் அமர்ந்து தோகை விரித்து விளையாடும்  சின்ன குடிலில். அதுவும் இப்போது அவர் அங்கு இல்லை, பின்னே? குன்று ஒன்று இடிந்து விழுந்ததே அதன் மேலிருந்து சிறுத்தையுடன் நின்று கொண்டிருந்த நன்னனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.



குடுமியற்ற தலையிலே வேப்பந்தளிரும், உழிஞைப்  பூவும் கொடியோடு அணிந்து வந்த அவரின் வயதை கணித்து சொல்வது கடினம் தான். நின்னனுக்கு ஒத்த வயதுடையவர் போல் இருந்தார். அவரை கண்டதும் நால்வரும் வணக்கம் செலுத்தினர். 

நாட்டில் செய்தி பரிமாற்றம் என்பது அன்று முதல் இன்று வரை முக்கியமானதாகவும், ஆட்சியே மாற்ற கூடியதாகவும் விளங்குகிறது. "நான் நலம்.. நீ நலமா..உன்னை காணமல் கண் வாடுதே " போன்ற காதல் கடிதங்களையும் புறா மூலமாக அனுப்பாலாம் வேறொரு பெண்ணின் கையில் கிடைத்தாலும் குற்றம் இல்லை, கொஞ்சம் முக்கிய செய்திகளை ஆள் அனுப்பி தெரிவிக்கலாம், அவசர செய்தியா.... குதிரையில் அனுப்பலாம். முக்கிய ராஜாங்க செய்திகளை அனுப்ப நம்ப தகுந்த ஆள் வேண்டும். இது போன்ற முக்கிய செய்திகளை எடுத்துச் செல்வோருக்கு ஏற்படும் இன்னல்களும் அபாயாயங்களும் எண்ணற்றவை. அதனால் தான் இது போன்ற முக்கிய செய்திகளை பரிமாற்ற இந்த நால் வரை தேர்ந்தெடுத்து குதிரை ஏறவும், வாள் சுழற்றவும், அம்பு எய்யவும், குதிரை இன்றி தனியாக மாட்டிக்கொண்டால் அடர்ந்த காட்டிலும் கூட சிறுத்தையை விட வேகமாவும் லாவகமாகும் ஓட பயற்சி அளித்துள்ளார் ராபதேஸ்வரர். அவர்களின் வளர்ச்சி அவருக்கு பெருமிதத்தையே தந்தது. இவர்களை போல இன்னும் பலர் குதிரை விற்பவர்களாகவும், கொல்லர்களாகவும் பல வேடங்களில் பல இடங்களில் இருக்கிறார்கள். 

  "நீ இளையவன் அல்லன்.. இணை அற்ற வீரன்.." அவர் வாயில் வந்த முதல் வாழ்த்து..... நின்னனின் முகத்தில் புன்னகை பூத்தது.

அவர் முன்னே குடிலை நோக்கி செல்ல நால்வரும் அவரை பின் தொடர்ந்து சென்றனர். சட்டென திரும்பி 

"நின்னன், உதயன், புங்கன், நல்லி உங்களுக்கு வேளை வந்துவிட்டது....."

அனைவருக்கும் சந்தோசம்.... இத்தனை வருடங்களாக பெற்ற பயிற்சியை பிரயோகப்படுத்தும் நாள்.. இந்த நாளுக்கு தானே இத்தனை நாட்கள் தவங் கிடந்தோம்.... என்று எண்ணி நின்னன் பேருவகை கொண்டான். 

தானும் பாராட்டு பெற "பயிற்சி முடிந்து விட்டதா.... தேர்ச்சி அடைந்து விட்டோமா.." ஆர்வமுடன் கேட்டான் நல்லி.

"இல்லை.... செல்வதற்கானா வேளை வந்துவிட்டது...." அதற்கு மேல் அவன் ஒன்றும் கேட்கவில்லை.

அவர்களிடம் வித்தியாச வேலைப்பாடணிந்த பவள முத்திரை ஒன்றை கொடுத்தார்...
"நீங்கள் ஒற்றர்கள்.... மக்களோடு மக்களாக இணைந்து நீங்கள் வாழ வேண்டும்.. உதயா நீ மதுரைக்கு போ.... புங்கா நீ கபடாபுரத்துக்கு செல்.....  நல்லி நீ கடல் கடந்து பெருவள நாட்டிற்கு செல்.....நின்னா நீ  நாகர் படையில் சென்று சேர்... இப்பொழுதே கிளம்பவும்...."

என்று கூறி நடையை தொடர்ந்தார்.... மூவருக்குமே அதிர்ச்சி..... உதயா கேட்டான் " மன்னிக்கவும்.... எங்களுக்கு என்ன வேலை என்று சொல்லவில்லையே...."

"வேலை காத்திருக்கிறது.... போங்கள் புரியும்.... முத்திரை பத்திரம்...."

அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை போகின்ற இடத்தில் வேலை இல்லை போகிற வழியில் தான் வேலை என்று...!!! 


Friday, January 24, 2014

பூவெழினி

குமரிகாண்டம் பற்றி அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.... சங்க பாடல்களில் இருக்கும் தகவல்களை வைத்து பார்த்தால் நமது தமிழ் சமுகம் 12000 கி.பி இல்லேயே மிகவும் முன்னேறிய ஒன்றாக இருந்திருக்க வேண்டும். கப்பல்கள், மாளிகைகள், அரசு, போர் படை மற்றும் பல. நிறைய தகவல்கள் சொல்வதற்கு இருக்கிறது குமரிக்கண்டத்தை பற்றியும் பாண்டியர்களை பற்றியும்..... அப்படியே சொல்லாமல் கதைவழியாக சொல்ல ஒரு சின்ன முயற்சி. உங்களுக்கு பிடிக்கும் என்கிற நம்பிக்கையுடன்....

1. நன்னன்

மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும் பூமி பந்தினை நிறுத்தி சற்று கிழக்கிலிருந்து மேற்காக சுற்றி விட்டால்.....  எம்.ஜி.ஆர் நான் ஆணை இட்டால் பாட்டிற்கு சாட்டையை சுழற்றி கொண்டிருப்பார்...... காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தில் குச்சியை பிடித்துக்கொண்டு நடந்து போய் கொண்டிருப்பார்...... ஆங்கிலயருக்கு எதிராக யாரோ ஒரு பெயர் தெரியாத வாலிபர் கையெறி குண்டினை வாயில் கடித்து வீசி கொண்டிருப்பார்.... முதன் முதலாக வாஸ்கடோ கமோ கள்ளிக்காட்டில் வந்து இறங்கி வைன்அருந்திக் கொண்டிருப்பார்.... இன்னும் கொஞ்சம் வேகமாக சுழற்றினால் மக்கள் மாட்டு வண்டிகளிலும் குதிரை பூட்டிய ரதங்களிலும் சென்று கொண்டிருப்பர்.., தஞ்சையில் ராஜ ராஜர் பெரிய கோவிலை கட்டிக்கொண்டிருப்பார்..... இயேசு பிறப்பார்..... முதன் முதலாய் ஒருவர் நாயினை வீட்டு விலங்காய் மாற்றி இருப்பார்.... இந்து நதிக் கரையில் மணிகளை அடைகளாய் பூட்டிய பெண்கள் நடனம் ஆடிக்கொண்டிருப்பார்....  அதற்கும் பின்னே பயணப்பட்டால் இலை தலைகளை அணிந்த மக்கள் நாடோடியாய் அலைந்து.... வேட்டை ஆடி நர மாமிசத்தை தின்று கொண்டிருப்பர்... அதற்கும் பின்னே போனால்...????

இன்னும் கொஞ்சம் வேகமாக சுழற்றி தமிழகத்துக்கு தெற்கே நகர்ந்தால்... குமரிக்கு தெற்கே உள்ள இந்தியப் பெருங்கடல் பனிக்கட்டியாய் சுண்டிபோய்.... அகன்ற கண்டம் ஒன்று நீருக்குள் இருந்து வெளிவரும்.... முழ்கிய பல்லாயிரக்கனக்கான கப்பல்களும் தென் மதுரையின் கரையில் அசைந்தாடி கொண்டிருக்கும். ஆங்கே வானுயர்ந்தமாட மாளிகையில்.... முழுதாய் பட்டாடை உடுத்தி.. சங்க பாடல் ஒன்றை பாடிக்கொண்டே நிலவை காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருப்பாள் ஒரு தமிழ் அன்னை..... அடடா இது என்ன காலம் என்று கேட்கிறீர்களா.... இது தான் முதல் சங்க காலம்... ஏறக்குறைய கி.பி. 12000ம் !!!!

நமக்கு மதுரையில் வேலை இல்லை.... அங்கிருந்து நகர்ந்து பக்றுளி ஆற்றை கடந்து குமரி கண்டத்தின் முதுகெலும்பை போல் விரிந்திருக்கும் மேரு மலையின் மேல் தோன்றும் முத்தாற்றின் முக்கிய துனை ஆறான ஹிர்தியாவுக்கு செல்வோம்.

தொல் பாண்டிய நாட்டில் ஓடும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளில் மிகவும் ஆக்ரோஷமான ஆறுகளை கொண்ட காடு மேகமலை காடுகள். அதில் மிகவும் ஆக்ரோஷமாக... பிளிறுகள் கூட கடக்க அஞ்சும் விதத்தில் பிளிறிக்கொண்டு செல்பவள் ஹிர்தியா. அடர்ந்த வனாந்திரம் சூழ்ந்த பகுதியில், மலை சரிவில் பறைகளை உருட்டிக்கொண்டு வேகமாக சென்றது ஹிர்தியா.

அவ்வாற்றங்கரையில் மான்கள் கால்களை தூக்கிக் கொண்டு இலைகளை பறித்து மென்று கொண்டு இருந்தன. ஆற்றின் இரைச்சலை தவிர மற்றபடி அமைதியாய் இருந்த கானகத்தில் முழவு கொட்டும் ஓசை ஆரம்பித்தது. மான்கள் கூட்டம் அலறி அடித்து ஓட ஆரம்பித்தன.... மரங்களின் நடுவில் இருந்து தின்று பருத்த சிறுத்தை ஒன்று தவ்வி குதித்தது.... முழவு கொட்டும் ஓசை இன்னும் அதிகமாய் கேட்டது. சிறுத்தைக்கு பின்னே நான்கு கட்டிளம் காளைகள் சிறுத்தையை துரத்திக்கொண்டு வந்தார்கள். இல்லை இல்லை அவர்கள் சிறுத்தையை துரத்தவில்லை அவர்களும் மானை தான் துரத்தினார்கள்.

சிறுத்தையின் வேகத்திற்கும் துரிதமான திசை மாறுதலுக்கும் கொஞ்சம் கூட அவர்கள் சலிக்கவில்லை. நான்கு பேரில் முன்னாள் சிறுத்தைக்கு மிக அருகில் வந்தவன் கொஞ்சம் வேகத்தை கூட்டித் தாவினான், சிறுத்தையும் தவ்வியது, மானும் உயிரை காப்பாற்ற பிரயத்தனம் செய்து தவ்வ முயற்சித்தது.

நமது இளைஞன் முன்னால் தவ்விய சிறுத்தையின் மேல் கால் வைத்து எம்பி மின்னல் வேகத்தில் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து மானின் கழுத்தை அறுக்க தொப்பென்று விழுந்து பொரண்டு கரையின் விளிம்பில் எழுந்தான். முழவு சத்தம் நின்றது..... மீதி மூவரும் கைதட்டினர்... சிறுத்தை அவனை பார்த்து உறுமிக்கொண்டே அரைவட்டம் அடித்தது. எந்த கணமும் அவன் மேல் பாய.... பாய்ந்துவிட்டது. இருவரும் தொப்பென்று வெள்ளத்தில் விழ.... சுழலில் சிக்கி சுற்றி... இழுத்துச்செல்லப்பட்டன். சிறுத்தை கூட கால்களை வைத்து தத்தியது.... பாறைகளின் ஊடே அடித்து செல்லும் நதி... அவனை அந்த பெரும்பாறைகளில் மோதி இருக்க வேண்டும். அவனை சுற்றி ரத்தக்கம்பலம் விரிக்கப்பட்டது. ஒரு சுத்த வீரன் கொல்லப்பட்டான் என்றதை மீதி மூவரால் நம்ப முடியவில்லை.

அந்த நொடி யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது.... ஆயிரம் இடி இடித்தார் போல பெரும் ஓசை கேட்டது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமோ....தெய்வாதீனமோ...மனிதனின் செயலோ.... அருகில் இருந்த குன்றில் நிலச்சரிவு ஏற்ப்பட்டு அந்த குன்று அப்படியே நகர்ந்து ஆற்றின் குறுக்கே அமர்ந்தது. நதியின் குறுக்கே தற்காலிக அணை ஏற்ப்பட்டு ஆற்றின் வெள்ளத்தை தடுத்தது. கீழ் கரையில் வெள்ளம் வடிந்தது மேல் கரையில் வெள்ளம் சேர்ந்து அணையை அரிக்க ஆரம்பித்தது. தடுமாறி எழுந்த இளைஞன்.... அணையை பார்த்தான்.. இன்னும் சில நொடிகள் தான்.. அணையை வெள்ளம் தகர்த்துவிடும். அண்ணாந்து கதிரவனை பார்த்து கும்பிட்டான்... தூரத்தில் ஓடிய சிறுத்தையை நோக்கி ஓடத் துவங்கினான். அணை உடைந்தது. வெள்ளம் அடித்துக்கொண்டு செல்ல கரையில் சிறுத்தையுடன் ஒதுங்கினான் நம் இளைஞன். மீண்டும் முழவு சத்தம் ஒழிக்க அனைவரும் "நன்னன்...நன்னன்..!!!" என்று கோஷமிட்டனர்.

அதிர்ஷ்டவசத்தால் எக்காலத்திலும் வற்றாத ஆறு கண நொடியில் வற்றி உயிர் பிழைக்க மறு வாய்ப்பு கிடைத்த போதிலும்... அதை பயன் படுத்தாமல் தன்னைகொல்ல வந்த சிறுத்தையை கொன்றது நம் பழந்தமிழர்களின் வீரம்..!!!

தொடரும்.